Monday, 26 October 2015

" 365 லிங்கங்கள் "



" 365 லிங்கங்கள் "

அழகு  நிறைந்த இந்தியாவின் மிகப்பெரிய திருக்கோயில்
" தியாகராஜர் கோயில் " ஆகும்.

திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று ஆகும்.

திருவாரூரில் இந்த கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள் ஆகும்.

தியாகராஜர் கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது.

இங்கு திருக்கோயில் சிறப்பம்சங்கள் 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்) ஆகும்.

100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரமாண்டமாக விளங்குகிறது.

இக்கோயிலை பெரியகோயில் என்றும் சொல்வர்.

திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு ஆகும்.

கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது ஆகும்.

தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது.

இந்திரன் பூஜித்த, சிறிய மரகதலிங்கத்திற்கு (வீதி விடங்க லிங்கம்) தான் காலை 8.30, 11மணி, இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும்.

அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த லிங்கம் வைக்கப்படும்.

அதன் மேல் வெள்ளிக்குவளை சாற்றி, அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படும்.

மற்ற நேரங்களில், பூட்டிய இந்த பெட்டி தியாகராஜரின் வலதுபுறத்தில் இருக்கும்

திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும் ( தூலலிங்கம் என்று சொல்லப்படும்).

தெற்கு வடக்காக 656 அடி அகலமும்,கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.

நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இவ்வாலயம் மிகவும் சிறப்பாக  அமைந்துள்ளது.

திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.

கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்). இவ்வளவு பிரமாண்டமான ஆலயத்தை முழுமையாக தரிசனம் செய்து முடிக்க வேண்டுமானால் ஒரு நாள் முழுவதும் செலவிட்டால் தான் முடியும்.

தல வரலாறு :

ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது

அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான்

அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம்என்ன வேண்டும்?’ என கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த விடங்க லிங்கத்தைக் கேட்டார்

தேவர்கள் மட்டுமே பூஜிக்கத்தக்க அந்த லிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை

தேவசிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப்போலவே 6 லிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான்

முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார்

வேறு வழியின்றி, இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான்

அவற்றில், நிஜ லிங்கமே திருவாரூரில் உள்ளது

மற்ற லிங்கங்கள் சுற்றியுள்ள கோயில்களில் உள்ளன. இவைசப்தவிடங்கத்தலங்கள்எனப்படுகின்றன

சப்தம்என்றால் ஏழு தலங்களில் உள்ளார் என்பது பௌருள் ஆகும்

திருவாரூரில்வீதி விடங்கர் " ஆகும்

திருநள்ளாறில்நகர விடங்கர் " ஆகும்

நாகப்பட்டினத்தில்சுந்தர விடங்கர் " ஆகும்

திருக்குவளையில்அவனி விடங்கர் " ஆகும்

திருவாய்மூரில்நீலவிடங்கர் " ஆகும்

வேதாரண்யத்தில்புவனி விடங்கர் " ஆகும்

திருக்காரவாசலில்ஆதி விடங்கர் " ஆகும்

விடங்கர்  என்ற பெயர்களில் விடங்க லிங்கங்கள் அழைக்கப்படுகின்றன. இந்த லிங்கங்கள் கையடக்க அளவே இருக்கும். சப்தவிடங்கத்தலங்கள் உள்ள
கோயில்களில் சுவாமியைதியாகராஜர்என்பர்

வழிபாடு நேரம் :

காலை 6 மணி - திருப்பள்ளி எழுச்சி ,பால் நிவேதனம்

காலை 7.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்

காலை 8 மணி - முதற் கால பூஜை

மதியம் 11.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்

பகல் 12 மணி - உச்சிக்கால பூஜை

பகல் 12.30 மணி - அன்னதானம்

மாலை 4 மணி - நடை திறப்பு

மாலை 6 மணி - சாயரட்சை பூஜை

இரவு 7.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்

இரவு 8.30 மணி - அர்த்தசாம பூஜை

பிரதான மூர்த்திகள் :

திருவாரூர் ஆலயத்தின் மூலவர் வன்மீகர். அவர் அருகே அன்னை சோமகுலாம்பிகை இருக்கிறாள்

இறைவன் சூரிய குலம்; அம்பிகை சந்திர குலம். வன்மீகரின் வலப்பக்கத்தில் - தனிச் சந்நிதியில் ஸ்ரீதியாகராஜர வீற்றிருக்கிறார்

சிறப்பு பூசைகள் எல்லாம் இவருக்கே நடத்தப்படுகிறது

தியாகராஜர் திருமேனியை ஒட்டி அவரோடு பிரிதலின்றி கொண்டி என்கிற சக்தி உள்ளாள்

கருவறையியல் தனியாக
விடங்கர் என்கிற மரகத லிங்கம் காணப்படுகிறது

இவரே அபிஷேக மூர்த்தி. அடுத்த பிராகாரத்தில் சிறு கோவிலில் உலகம்மை நீலோத் பலாம்பிகையாக காட்சி யளிக்கிறாள்

கடைசி பிராகாரத்தின் வடமேல் மூலையில் தனிக்கோயிலில் குட்டிகாசனத்தில் ஸ்ரீகமலாம்பிகை தவக்கோலத்தில் வீற்றிருக்கிறாள்

இவர்களே ஆலயத்தின் பிரதான மூர்த்திகள்

இக்கோவிலின் இரண்டு தேவியாரும் பூவைப் பெயராகக் கொண்டிருக்கிறார்கள்

ஒருத்தி கமலத்தை கொண்டு
கமலாம்பிகை எனப்படுகிறாள். மற்றவள் நீலோத்பல மலரைக் கொண்டு நீலோத் பலாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்

திருவாரூரில் பிறந்தாலே முத்தியாகும் ஆகவே நாம் ஒரு முறையாவது இந்த கோயிலை தரிசனம் செய்து பிறந்த பிறவியின் பயனை அடைவோம்

மேலும் நமக்கெல்லாம் ஒரு வாய்ப்பை தியாகராஜர் கொடுத்திருக்கிறார் அடுத்த மாதம் திருவாரூர் திருக்கோயில் கும்பாபிசேகம் நடைபெறுகிறது இதில் மெய்யடியார்கள் கலந்து கொண்டு திருவாரூரில் பிறந்த அத்தனை மெய்யடியார்களுக்கும் பாத்திரமாகுவோம் மேலும் நம் பரம்பொருள் ( சிவபெருமான்)  திருவாரூர் வீதியில் நடந்த பொற்பாதங்களை நாமும் கண்டு அதில் பங்கேற்று பயன் அடைவோம்

திருச்சிற்றம்பலம்